Thursday 30 May 2013

புதையல்

என் ரகசிய பெட்டகம் முழுதும்
நீ தந்த தித்திக்கும்
முத்தங்கள்.

காட்சிபிழை



பாதுகாப்பு சுவரெழுப்பினான் ,
கல்லறையானது.

தேவை

உன்னில் குறைந்ததாக

எதுவும் வேண்டாம்!

எத்தனை காவலிருந்தாலும்,
வந்து விடுகிறது ஒரு எறும்பு,
தட்டிவிடுகிறது ஒரு பூனை

நுழைந்து விடுகிறாள் ஒரு பெண்!

நினைப்பு

"நினைக்கக்கூடாது" என்பதில் தொடங்குகிறது;
நினைப்பு

வெட்கவெளி

அந்த காட்டுவழியெங்கும்
காதலை பாடி வந்தேன்,

உன் பெயரை மூளிச்சென்றது
காற்று,
தலையாட்டி சிரித்தன
மரங்கள்
என் வெட்க வெளியெங்கும் மலர்ந்தன
பேரில்லா பூக்கள்!

நுணிப்புல்

ஓநாய்கள் இருப்பது தெரிந்தே
விலகிச்செல்லும் ஆடுகள்
சுதந்திர காற்றை சுவாசிக்கின்றன,
விழிப்புணர்வு பெற்றவை
மேய்ப்பானின் காலடி திரும்புகின்றன,
அவன் கூட்டிச்செல்லும் இடமெல்லாம்
பச்சைபசும் புல்வெளியே !
மற்ற ஆடுகளுக்கோ
மேய்ச்சல் நிலமில்லை!

மனைவியை செல்லமாய் அழைக்கும் "குட்டீம்மா" ,
ஆனந்த வர்ஷினி பிறந்தபின்
"குட்டிதேவதையின் அம்மா" ஆனது!

அடையாளம்

அம்மாவுக்கு,
அப்பாவுக்கு
அக்காவுக்கு
நண்பர்களுக்கு
பள்ளிக்கு
இப்படி , என்னை அழைக்க
எத்தனை பெயர்கள் இருந்தாலென்ன,
நீயழைக்கும்
செல்ல "திருட்டு பயலாய்"
அடையாளம் கொள்கிறேன் நான்.

கீச் கீச்

இதயக்கூட்டில் நம்மை பற்றி
கனவுகள் அடைகாக்கும் சிறு பறவை நான்
குஞ்சு பொரித்த குட்டி குட்டி கவிதைகள்
"கீச்,கீச்,கீச்"!

விலகிப்போதலின் அடையாளம்

விலகிப்போன பாதையில்
கல்தடத்தை பதித்தே போயிருக்கிறாய்
எனக்காக!
நானோ ,உன் பாதச்சுவட்டை கண்டதும்
வழி மாற்றி நகர்கிறேன்!

சேமிப்பு

அவளின் முதல் புன்னகைக்கே
வாழ்க்கையை எழுதிக்கொடுத்த அப்பாவிடம்,
அடுத்தடுத்த புன்னகைக்கு கொடுக்க
கோடி முத்தங்கள்
சேமிப்பாக இருக்கிறது.

சித்திரை கணி

குன்றிமணி தங்கம்
வெற்றிலை பாக்கு
கொஞ்சம் பழவகைகளோடு இனிப்பு ,
திருவிளக்கின் ஒளியில்
கொன்றை பூ அலங்கரித்து வைத்து
குழலூதி நிற்க்கும் கண்ணனை
என் கண்பொத்தி
கூட்டிப்போய் கண்டால்
சித்திரைக்கணி ,
காப்பியோடு எழுப்பும்
உன் அழகு முகத்தில்
விழிக்கும் நாளெல்லாம்
எனக்கு
சித்திரத்தை கணி!

வீண் வம்பு

"யாரவது பாத்துடுவாங்க" என்று
விலகியே நடக்கும் உன்னோடு
மிக சேர்ந்திருப்பதாய்
குதித்து கும்மாளமிட்டு
என்னை வம்புக்கிழுக்கும்
ஜிமிக்கியிடம் சொல்லி வை
"கொன்னுப்புடுவேன் கொன்னு"!

ஏவாள்

குழந்தையை கொஞ்சும்
ஊமைத்தாயின் முகத்தில்
ஏவாளின் சாயல்!

முத்தச்சுவை

அழுது
அடம் பிடித்து
ஆர்ப்பாட்டம் செய்து பிடுங்கி
புன்னகையோடு நக்கி தின்ற
அந்த புளிப்பு மிட்டாயின்
அதே சுவைதான்
இப்போது நான் வாங்கும் முத்தங்களிலெல்லாம்,
நீயாக தருவதில்
இனிப்பதிகம்!

வெக்கை

ஹோ,என்ன வெயில்!
புழுக்கம் தாங்காமல்
உள்ளேயிருந்து எழுந்து
திண்ணையில் வந்தமர்ந்தேன் .
"மோர் கலக்கி தரட்டுமாடா "
அடுப்படியிலிருந்து கேட்டாள்
அம்மா!

வான வேடிக்கை

வாணவேடிக்கை பார்த்து
கைதட்டி சிரிக்கும் குழந்தையை
ரசித்தபடி ,வேடிக்கை பார்க்கிறது
வானம்.

மலரானவள் உதடுகளில்
தேனெடுக்கும்
பட்டாம்பூச்சி நான்

ஏதோ ஒன்று

எல்லோருமே
ஏதோ ஒன்றை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
"ஏதோ ஒன்றுதான்"
எல்லாமே!

பிறவிபயன்

"என்னோடு சண்டைபிடிப்பதற்காகவே
பிறந்தவள் நீ
உன்னை கட்டியணைப்பதற்க்காகவே
பிறந்தவன் நான் "

நீ கோபப்படும் நேரங்களில்
இப்படித்தான் தோன்றித்தொலைக்கிறது

நானென்ன செய்ய? போடி!

கொஞ்சநேரம்

"கொஞ்ச நேரத்துல  வந்துர்ரேன்" என்கிறாயே,

"கொஞ்ச நேரம் பொறுத்துக்கம்மா"
பிரசவ அறைகளில் சொல்வார்களே, 
அந்த கொஞ்ச நேரமாய் இருக்கிறது
உனக்காக காத்திருக்கும்
இக்கணங்கள்.
உனக்கு தெரியாது; போடா!

திருவிழா

எல்லா திருவிழா நாட்களிலும்
ஊருக்கு வருகிறாய் நீ,
நீ வரும் நாட்களிலெல்லாம் தான்
திருவிழா நடக்கிறது இங்கே!

"கொஞ்ச நேரம்" பேசலாமென்று
நீ அழைக்கும் நாட்களிலெல்லாம்
கொஞ்சநேரம்
முன்னதாகவே வந்து
காத்திருக்கிறேன்!

முகம்

பூவை மொய்க்கும் பட்டாம்பூச்சிகள்
புண்ணை மொய்க்கும் ஈக்கள்
என்னை மொய்க்கும்
உன் நினைவுகளுக்கு
இரட்டை முகம்

ஆழ்ந்துறங்கும் குழந்தையாய்
அமைதியாய் கிடக்கிறது
இவ்விரவு.
உறங்கும் குழந்தையின் மூச்சைப்போல
காற்றில் மிதக்கிறது
நீ எப்போதும் முணுமுணுக்கும்
அந்த பாடலின் கடைசிவரி
மூச்சை வெளியேற்றும் சப்தமென
மெதுமெதுவாய் துடிக்கிறதென் இதயம்.
காதலில் உறங்க முடிவதில்லை,
ஏதுமறியா ஒரு குழந்தையென.

துணை

நான் தனியே கஷ்டப்படக்கூடாதென்று
நினைவுகளை துணையாக விட்டுச்சென்றிருக்கிறாள்

இன்னொரு பெயர்

பெண்கள் எடுத்துக்கொள்ளும் உரிமை
அன்பு எனப்படும்
ஆண்களலால் எடுக்கப்படும் உரிமை 
ஆதிக்கம் எனப்படும்.

Saturday 25 May 2013

முத்தங்கொண்டு
குத்திய பச்சை
அழிவதுண்டோ?

தமிழ்

எல்லாம் எதிரொலிகள்தாம்
மெய்குரல் கரைந்துபோய்
வெகுநேரமாயிற்று!

வேண்டுவது

உன் தேகச்சூட்டில்
எரித்துவிடேன் என்னை

நடைபாதை

அந்த சாலையில்
கிழிந்துபோய்
குப்பையாய் கிடக்கிறது
ஒரு பயணச்சீட்டு!
அதே சாலையில்
மேலும் சில மனிதர்கள்!

பண்டமாற்று

புன்னகை கொடுத்து
புன்னகை பெற்றுக்கொள்ளுங்கள்!
பாரட்டு கொடுத்து
பாராட்டை பெற்றுக்கொள்வது
கேவலம்!

திட்டித்தீர்

பேசமலிருக்காதே .

பெரும் பசி………

காட்டை தின்று தீர்த்தான் 

விக்கலெடுத்தது

குடிக்க தண்ணியில்லை.

நீ கடல்
உன் சிரிப்பு மழை 
கன்னக்குழி சுழல்
சிக்கிக்கொண்ட கப்பல் நான்

புணர்ச்சியில் பாம்புகள்
மேலேயெழும்பும்.
என் தேவை; பறப்பது!

சுயம்

உடைத்து வெளியேறும் புழு;
பட்டாம்பூச்சி!
துளைத்து உள் நுழைந்து நான் ;
கடவுளானேன்

நிழல்

போக்குவரத்துமிக்க  சிறு சாலையில்
மிக வேகமாய் ,
வளைத்து வளைத்து
தன் மிதிவண்டியில்
சாகசமாய் பயணிக்கிறான்
அந்த சிறுவன்.
திரும்பிபார்த்து முணங்கும்
பாதசாரிகளின் வசைகளிலிருந்து
லாவகமாய் தப்பிச்செல்கிறது,
அவன் நிழல்.

அப்பாவின் நேசம் மொத்தம்
ஆனந்த வர்ஷினிக்குத்தான்,
நெருங்குவது
அம்மாவாக இருந்தாலும் ,

"அடி கெடய்க்கும்".

பொணக்கனம் கனக்குதடீ

ஊன்நெனப்பு!

நேசித்து நேசித்து
மனதை கெடுத்தவன்,
குடித்து குடித்து
உடலை கெடுக்கிறான்

செத்து தொலையட்டும் ,
நமக்கென்ன!

வீடு

கோடி கோள்கள்
கோடி கோடி நட்சத்திரம்

இருந்துவிட்டு போகட்டுமே
நான் வசிக்கும் நீ
என் ஒற்றை வீடு!

மந்திரச்சொல்

என் மந்திர சொல்லுக்கு
சில நேரம் சக்தியில்லை
மீண்டும் மீண்டும் முயற்சித்து
தோற்றுவிட்டேன்

இன்னும் ஒருமுறை
முயற்சித்து பார்க்கலாம்

"போனா மயிரு போச்சு, போ"!

ஹா ஹா வெற்றி வெற்றி வெற்றி!

பரிசல்

"முல்லைக்கு தேர் கொடுத்தானாம் பாரி"
அதென்ன பிரமாதம்
"முல்லைப்பூ அமர தன் கூந்தலை கொடுத்திருக்கிறாள்
என் குட்டி லாரி"

***

"உலகில் உன்போல யாருமில்ல
ஒல்லி "

நான்தான் ,
நீ குளிக்கையில
உள்ள நுழையும் பல்லி"

***

"கொடியில பூத்திருக்கே அந்த பூ பேரு பூசணி "

" என் மடியில பூத்திருக்கியே ,
நீதான் எனக்கு புடிச்ச சனி"

*** 


உன்னை வாழ்த்திப்பாடும்
என் கவிதைகளுக்கான
பரிசல் பொருளை
"கொட்டோ கொட்டென்று"
கொட்டிதீர்க்கும் மழை
நீ! ;-)

வேடிக்கை விளையாட்டு


அழுது களைத்து
மயங்கி தெளிந்து
ஆறுதல்பட்டு ,
நிதானமாகி
சுதாரித்து எழுந்து நின்றபின்
காலை இடறிவிட்டு
மீண்டும் விழ வை
"ஆஹா, நல்ல சுகம்"
அருமை உன் பொழுதுபோக்கு.
:(

மரணம்
ஒரு கால இயந்திரம்;
இயக்க தெரிவதில்லை
நமக்கு!

அதிகாலை மலர்ந்துவிட்ட புதிய பூ போல
உன் பழிவாங்கும் உணர்ச்சி
வார்த்தைகளாய் விரிகிறது, உன் சிரிப்பில் முட்கள்

"யானைக்கும் அடி சருக்கும்"
நீ என்னை தேர்ந்தெடுத்தாய்!


தவறை திருத்திக்கொண்டாய்;
தவறேயில்லை!


வெறுப்பின் பள்ளத்தாக்கிலிருந்து
அகங்காரத்தின் உச்சிக்கு செல்லும் பயணியே,
உன் யாத்திரை இனிதாகட்டும் !


நான் ,
கவிதைகளால்

என் உலகத்தை
அழகுபடுத்திக்கொள்பவன்!


நிர்வாணம் விரும்புவன் ,
முகமூடி இடுவதில்லை!


அந்த மழை எனக்கானதல்ல!
இந்த வெயில் உனக்கானதல்ல!

ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

வீழ்வது

உன் மடியிலென்றால்

கோடி முறை வீழ்ந்தால் என்ன!

Photo: sripriya

பூச்சாண்டி

"சாப்பிடலேன்னா, அம்மா பூச்சாண்டிகிட்ட பிடிச்சு குடுத்துருவேன்"!

நீ சாப்பிடும்
ஒவ்வொரு கவளம் சோற்றிர்க்கும்
ஒரு பூச்சாண்டி
தேவதையாகிறது!
"இன்னும் ,
ஒரே ஒரு வாய் சாப்பிடேன் அம்மூ"!

பூ,
அழகா என்ன?
அவள் ,
புன்னகை பார்த்த பின்னே.

நிச்சயதார்த்தம்

"திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன"



நிச்சயம் நடந்த இடம்
சொர்க்கமா ,என்று தெரியவில்லை;
நான்  மோதிரம் அணிவித்தது
தேவதைக்குத்தான்!

இருள் கவியும் காலம்

கயிற்றுக்கட்டிலில் அமர்ந்திருக்கிறார்
தாத்தா.

வெடித்துக்கிடக்கும் வயல் வெளியில்
சோகமாய் பாடிச்செல்கிறது
ராப்பாடி 

கொட்டடியில்
'எதையோ' அசைப்போட்டுக்கொண்டிருந்தது
மெலிந்த காளைகள்.

தூரத்தில்  மறைகிறான் சூரியன்!

கல்நெஞ்சக்காரியென்றாய் !
பூவாக மாறியவளை ,
முகர்ந்து வீசி
மிதித்து நசுக்குகிறாய் !

ஊர் முழுக்க சொல்கிறது
நீ முரடனாமே,

என்ன முரட்டுப்பயலோ நீ,போடா!

கட்டி அணைக்கும்போது
எனக்கு மூச்சு முட்டுவதேயில்லை!

பூச்சாண்டிக்கு பயப்படாத அம்மாவிடம்
அப்பாவாகி மிரட்டுகிறான்
சிவசித்தார்த்தன்

டேய்,
நீ அருகிலில்லாத
இந்த நாட்களில் ,
உன் முத்தங்களை
கனவாய் உருமாற்ற முயற்ச்சிக்கிறேன்,
பேரின்பத்தில் சிறு வலியோடு
மீசை முடியைப்போல நகர்கிறது
இந்த இரவு.

மூழ்கும் கப்பலில் ,

அணையும் வெளிச்சம்; நம்பிக்கை

உயிர் காக்கும் முயற்ச்சி ;கவிதை

கடைசி மூச்சு ;கண்ணீர்

அடியாழ நிசப்தம் ;காத்திருத்தல்

காதலொரு பெருங்கடல்!

உன்னோடு ரகசியமாய்
தொலைப்பேசியபின் 
நாம் சேர்ந்து வாழும்
மகிழ்ச்சி கனவுகள்
தொல்லைபேசும்.
விடிகாலையில் உறங்கத்தொடங்கும்
காதல் இரவுகள்!

பூவாலஜி

முதல் புன்னகையும்
முதல் காதலும்
நிகழ்ந்த கணத்தில்தான் பூத்திருக்கும்
முதல் பூ .
அல்லது ;
முதல் பூ பூத்த கணத்தில் நிகழ்ந்திருக்கலாம்
எல்லாம்!

********

பூ
ஆணிவேரின் புன்னகை .

********

கனிவாய் ஒரு பார்வை
எரித்துவிடும் ஒரு பார்வை
நிராகரித்து விலகிச்செல்லும்
இன்னொரு பார்வை 
இருந்தும் ,மீண்டும்
உன் பார்வைக்காக
ஏங்கி தவமிருக்கும்
சூரிய காந்தி பூ நான்!

********

பெண்குழந்தை பெற்ற தாய்
பூச்செடி வளர்ப்பாள் .

குழந்தையில்லா 'தாய்'
பூ வளர்ப்பாள் .

******

மனைவி வீட்டோடு
மகன் காட்டோடு
பூவும்
உன்னோடு சேர்ந்து புதையும்!

*****

செண்பக பூ பறிக்க
மரம் ஏறியவள்
முதல் புதுமைப்பெண்
அல்லது
புரட்சிக்காரி.

*****
செண்பக பூ பறிக்க
மரம் ஏறியவள்
முதல் புதுமைப்பெண்
அல்லது
புரட்சிக்காரி.

*****

இந்த பிரபஞ்சமே ,ஒரு மலர்க்காடுதானே?

*****
வாழைப்பூ சேமித்து வைத்த
தேன் துளி போல,
உனக்கு தரமுடியாத முத்தங்கள்
என் பிள்ளைக்கு!
*****

உன் பின்னால் வரும் ,என்னை
வேடிக்கை பார்க்கும் கனகாம்பரம் ,தோழிகள் .
அந்த ஒற்றை ரோஜா, ராஜகுமாரி .
நீ மாட மாளிகை!

*******

ஆண் ,தன் காதலை
நண்பனிடம் சொல்வான்.
பெண் ,தன் காதலை
பூவிடம் சொல்வாள்!

*****
மல்லிகைப்பூவின் மொழி தெரிந்தவன்
மனைவியை நேசிக்கிறவன்!

*******

பூக்களால் அடையாளம் கண்ட உடலை ,
சில நூறுகளில்
தீண்டி விடலாம்  .

வாசனைகள் வெளியிடும் ஆன்மாவை
யாரால் ஸ்பரிசிக்க இயலும் ???
காதலற்ற நாசிகள்
நாசமாய் போகட்டும்!

*******

ஆதி முத்தத்தை
பார்த்த வெட்கத்திலோ,
இன்னும் சிவந்திருக்கின்றன
வேலி செம்பருத்திகள் .

*****
நீ பறித்த அத்தனை செடிகளும்
விதவையாகின,
நீ சூடிய அத்தனை பூக்களும்
சொர்க்கமேகின!

******
ஆண்களுக்கு பெண்கள்;
கள்ளிப்பழம்.

பெண்களுக்கு ஆண்கள் ;
கள்ளிப்பூ

******

சிவலிங்கத்தை காக்கும்
நாகலிங்க பூ போல
நம் காதலையும்
பொத்தி பொத்தி காத்திடுவேன்

நீயும்  இறையும்
எனக்கு ஒன்றுதான் .

******

நீ
மஞ்சள் தேய்த்து குளிக்கும்
என் செண்டுமல்லி!

*****

வண்ணமும் வடிவமும் வாசனையும்
பூவுக்கு பூ வேறுபடுவது போல,
காதலும்  ,மனிதருள் மாறுபடும்!

******

மலர்தல் ஞானம்
வாசனை அன்பு
உதிர்தல் வீடுபேறு .

****

நட்டதும், வளர்த்ததும் நீயென்று
உரிமையெடுக்காதே,
"மலர்ந்தது "அது.

*******
பெயர் தெரியாத பூக்களுக்கு
பெண்ணின் பெயர் மிகப்பொருத்தம்,
பெயர் தெரியாத பெண்ணிற்க்கு
பூவின் பெயர் பொருந்துவதில்லை!

*****

பூ ,
அம்மனுக்கு
சுமங்கலி வரம் கொடுக்கும்!

*****-

புத்தனில் மலர்கிறது நீல பத்மம்,
நீல பத்மமாய் பிறக்கிறான்
புத்தன்!

******
மனதிற்குள்
காதல் இருக்கிறது தானே?
பூவின் கீழ் விதையிருப்பது போல!

நான் இயற்றும் கவிதைகளை
நீ பாடுகின்றாய் .
படுக்கையறை நிறைத்து கவிகின்றது
காதலின் இசை

காலமற்ற நிலை

நீ, என் வெப்பத்தில் குளிர்காய்கிறாய்.
நான், உன் வியர்வையில் குளிக்கிறேன் ,
தன்னிலையறியாது குழம்புகிறது
காலம்!

பிரிவெனும் செங்கல் சூளையில்
வீசப்பட்ட இதயம் 

மீண்டு வருகையில் ,
உறுதி இருக்கும்
ஈரம் இருக்காது.
இனி ,உங்கள் விருப்பம்!

நீ ,போ!
எந்த புகார்களுமில்லை எனக்கு.
கடைசி முடியும் ,நரைத்துப்போகும் காலம் வரும் 
அப்போது வருவேன் .
உன் மகனை ,
"மகனே" என்றழைத்து விசாரிப்பேன்
உன்னைப்பற்றி!
அவனுக்கு "அம்மா" என்றழைக்க சொல்லிக்கொடு ,
அது போதும்!
நீ போ
எந்த புகார்களுமில்லையெனக்கு.

பார்வை

உன் வானம் ,
எனக்கு மகிழ்ச்சியே!
காலின் கீழ்
நழுவாதிருக்கட்டும் பூமி.

தானாகவே வருகிறது அழுகை.
முயற்ச்சித்தாலும் வருவதில்லை
புன்னகை!

பற்றிக்கொள்ள
உன் கைத்தலமில்லாத பாதைகள்
பார்வைக்கெட்டும் தூரம் வரை
பாழாய்க்கிடக்கிறது.

அதே செடியில்
இன்னொரு குறிஞ்சி பூக்கும் .
அதே பட்டாம்பூச்சி திரும்ப வராது!

வீணர்களே,
வெற்றுக்கூச்சலை நிறுத்துங்கள்
பேரமைதி கொண்டவர்க்கே
பேரன்பு சாத்தியப்படும்.

கடல்

உன் அன்பெனும் தொட்டியில் நீந்தும்
குட்டி மீன் நான் .
உன் அணைப்பை தவிர
வேறென்ன வேண்டும்
நான் வாழ்வதற்க்கு!

Friday 24 May 2013

உனக்குத்தான் எத்தனை முகம்!
எத்தனை குரல்!
அணைக்கத்தான் கைகளில்லை!

வலி

"தக்கை"யின் நடனத்தை ரசிக்கும்  உன் கண்களுக்கு,
மீனின் உயிர்வலி
வெடிசிரிப்பு!

ஆசை


கடைசி ஆசை என்னவென்று கேட்டுவிட்டு
யாருக்கேனும்
வாழ்வை கொடுத்திருக்கிறீர்களா, என்ன?

தவறுகள் ,என் மீதே இருப்பினும், 
சண்டையிடுவேன்.
தேற்றுவதற்கு நீயிருப்பாய் என்பதால்
தேம்பி தேம்பி அழுவேன்!

போடா! பன்னிநாயே,
எருமே…… பிசாசு!

வெயில் …………பாவம்!
மன்னிப்பு வேண்டி ,
குடைபிடித்துவரும்
உன் காலடியில் கிடக்குது பார்!

*-*-*-*

மழை……………பாவம்! :(

குடைகொண்டு ,நீ நிராகரித்த மழை,
கலங்கி கிடக்கிறது
சாலை மொத்தம்!

குழந்தைகளின் கடலில்

நுழைந்துவிடும்
அலைகள்!
வெளியே நின்று வேடிக்கை பார்க்கும்
கடல்.

"ஒரு கொடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்துச்சாம்"!

ரெண்டு கொடம் தண்ணீ ஊத்தி ,
ரெண்டு பூ பூத்துச்சாம்"! 

கைகள் கோர்த்து
அன்பை பறிமாறிக்கொண்ட, அப்போதும்
பார்வையால் மட்டுமே
பேசிக்கடக்கும்
இப்போதும்

கோடி குடம் தண்ணி ஊத்தி
கோடி பூ பூத்த மலர்க்காடாய்
எங்கள் தெரு!

"உனக்கு வேற வேலையே இல்லியா"?





"குலை குலையா முந்திரிக்கா" காலம்தொட்டு
உன் பின்னால் சுற்றுவதை தவிற
வேறு வேலையில்லா
நரி நான்!

"புரிஞ்சுக்கடி ராசாத்தி"! <3<3<3

Friday 17 May 2013

எனக்கு தெரியும் ,
வாழ்க்கை ஒரு பந்தையமல்ல;
நெடும்பயணம்.

தோளோடு தோள் நின்று
மகிழ்விக்கும் தோழன் போல ,
அன்பாய்
மேடு பள்ளங்களில்
பதறாமல் கூட வரும்
மனைவி போல
என் வழிப்பயணத்திற்க்கு
நம்பி எடுக்கிரேன்
என் புல்லட்டை! 
*****
எனக்கு தெரியும்
இந்த பாதை எனக்கனது மட்டுமல்ல,
உங்களுக்கானது ,
அவருக்கானது,
அவளுக்கானது,
தன் பாதையை
தானே போட்டு செல்லும்
ஒரு பட்டாம் பூச்சிக்குமானதென்று
என் புல்லட்
யாருக்கும் தொல்லை தராத
எல்லோருடைய பாதையிலும் செல்லும் .
******'*
350cc யின் அபரிதமான ஆற்றல்
100cc க்கு வழி தந்து
"டாட்டா"காட்டும். 

அகம்பாவத்தில்
அரைகூவல்விட்டுச்செல்லும் அவர்களுக்கு 
பெரும் பணிவு கொண்ட ,வாயுபுத்ரனை புரியாது 
*****
மழை வருவது
மயிலுக்கும் தவளைக்கும் தெரிவது போல
தூரத்தில் நான் வருவதும்
என் அன்பர்களுக்கு தெரியும்  .  

******
புல்லட்டை
தொடக்குவதும் இயக்குவதும்
ஒரு கலை,
ஒரு தியனம் !
இயக்கத்தில் ,
புல்லட்டின் சப்தத்தில் கரைந்து
காணாமல் போய்
பயணம் மட்டுமே மீதமிருப்பது
"ஜென்"!

*******

இளையராஜாவை பாடியபடி
குளிர்காற்று முத்தமிட
பிற வாகனங்களற்ற புறவழியில்
பெளர்ணமி  நிலா வெளிச்சத்தில்
பைக்கில் பயணத்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் 

புல்லட்டில் பயணிப்பவர்கள்
வரம் பெற்றவர்கள்!

"டுப் , டுப் , டுப், டுப்"!