Tuesday 26 March 2013

மேலும் மேலும் பூக்கள் தேடி
விதவிதமான தேனில் மயங்கும்
இந்த பட்டாம்பூச்சி
ஒரே இணையை
புணர்ந்து
பறந்து
மயங்கி
சரிந்து சாவும் !
ஒரே பூவில்
ஓராயிரம் முறை தேனெடுக்கும்
வித்தை தெரியவில்லை எனக்கு,
நான் வெறும்
மனிதப்புழு!


உயரஉயர பறக்கும்
ஒரு பந்தயப்புறா,
மின் கம்பியில் தொங்கும்
ஒரு செத்த காக்கை
பசியாய் அலையும் ஒரு தெருநாய்
இவற்றை தவிர
நானும் இருந்தேன்
அந்த பாதையில்!

உணர்ச்சிபெருக்காய் எழுதிய கவிஞன்
உயிரோடிருந்தான், 
கொந்தளித்த கூட்டத்தில்
ஒருவன் கதை
பாழாய்ப்போன கதை!

***

ராஜ போஜனம் முடித்து
ராணியோடு  சல்லாபித்து ,
ஆசுவாசமாய் உறங்கியெழுந்து
இன்று காலை கொண்டுவந்தான்
எங்களுக்கான புரட்சிகவிதை!

***

தியாகியென்றும்
போராளியென்றும்
ஊரே உன்னை கொண்டாட,
கரிக்கட்டையாய்
மீதம் கிடக்குதோ
அம்மா வைத்த திர்ஷ்டி பொட்டு?

மலையுச்சிலிருந்து பார்க்கையில்
வறண்ட குளத்தின்
வெடித்த நிலமாய்
நகரம்!

இப்போது!

"எங்கெ சென்றுகொண்டிருக்கிறோம்?"கேட்டேன் நான்.
"தெரியாது !"என்றது நட்சத்திரம்.
என்ன செய்துகொண்டிருக்கிறாயென்று கேட்டது என்னை,
நானும் தெரியாதென்று சொன்னேன்.

உலகம்

வெறிபிடித்து ஓடியலையும்
பைத்தியகாரனின்
நழுவி விழுந்த இடை ஆடைதானே,
இந்த உலகம்?

இரண்டு பேர் காதல்
ஒரு மெளனமாகிறது,
இரண்டு பேர் மெளனம்
ஒரு காதலாகிறது ,
மெளனம் சூன்யமாகிறது
காதல் பூர்ணமாகிறது.

உன்னையும் என்னையும் சேர்த்து
பூஜ்யமாக்கிவிட்டது
காதல் கணக்கு

கெஞ்சியும்,
பிடுங்கியும்,
திருடியும் சேகரித்த
முத்தங்களும்,கவிதைகளும்,
ஒரு குல்மொஹர் மரமாய் வளர்ந்து நிற்கிறது .

உதிர்ந்து  சிதறிகிடக்கும்
பூக்களையும்,இலைகளையும் பார்த்தபடி மெளனமாய் சிலபொழுது!

48/48b உக்கடம் to பாட்டம்பாறை!

48b யின் வருகைக்காய்,
விலகி நின்று காத்திருக்கிறோம்,
இன்னும் கொஞ்சம் தாமதமாய் வரும்படி நீயும் ,
வரவே கூடதென நானும்
வேண்டிகொண்டிருக்கயில்
வருகிறது

பேருந்தும் மழையும்!
ஜன்னலோர துள்ளிகளோடு தொடர்கிறது
நம் மகிழ்ச்சியான மழை பேச்சு!

***
மூச்சுகாற்றின் உஷ்ணம் நிறையும்
இருக்கை கிடைக்காத
நெரிசல் பேருந்தில்,
ஒரு கையில் பைய்யும்
மறுகையால் கம்பியும்
பற்றியபடி நிற்கிறாள் அவள்.
கலைந்த முடியை
தலை திருப்பி சரிசெய்ய முயல்கையில்,
சட்டென கடக்கிறது
ஒரு பார்வையும்
ஒரு குளிர்காற்றும்!

***
கோவிலை கடக்கும் பேருந்து,
கண்கள் மூடி பிரார்த்தித்து
கன்னத்தில் போட்டு கொண்டு
கண்கள் திறந்த அவள் ,
தவறவிட்டாள்

எட்டிப்பார்த்த பிள்ளையாரை!

***

குழியிலிறங்கிய பேருந்தில்,
கண்ணாடி வளையலும் கம்பியும் முத்தமிட,
அதிர்ச்சியில் உறைகிறது
அவள் கைக்கடிகாரம்!

***

"அண்ணா, ஒரு ஆள் இறங்கணும்" என்கையில்
நிற்க்கிறது பேருந்து,
மனமும்!

***

முன் படியில் இறங்க வரும் ஆண்களையெல்லாம்
முறைத்து கொண்டிருந்தாள் …………
அவன் வரும் வரை!

****
எல்லோரும் நம்பி விடுங்கள்!,
இறங்கிய பின் ,
"டாட்டா"காட்டியது
அவள் தோழிக்காம்!

***

மூன்று முறை பதட்டமாகவும், 
எட்டு முறை
கள்ளத்தனமாகவும் பார்த்தாள்

அவளையேதான்  பார்த்துக்கொண்டிருந்தான்!
***

பாசாங்காய் ஒரு  புன்னகையை
ஒட்டவைக்கும் அவள் முகத்தில்
அழுத களைப்பு தெரிந்தது,
அந்த ஸ்டிக்கர் பொட்டு ,
வீடு போகும்முன் ,
விழுந்ததோ,என்னவோ?

***

ஒரு புன்னகையும் 10 ரூபாயும் நீட்ட,
"கூட்டம் ஜாஸ்தி,
உன் ஸ்டாப்லயெல்லாம் நிறுத்தமாட்டேனென்று
சிரித்தபடி
பின்பக்கம் நகர்கிறார் .

"எல்லாரும் பத்து பத்தா குடுத்தா ,
சில்லரைக்கு நான் எங்க போறது???
கத்துகிறார் சிடுமூஞ்சி!
கோபமோ,புன்னகையோ ,
கியர் மாற்றிய பேருந்தாய் இயல்பாய் நகர்கிறார்
நடத்துனர் கருப்புசாமி அண்ணா!

***

சில்லரை பாக்கிகாக
சண்டையிட்ட முதியவர்
டாஸ்மாக்கில் இறங்கினார்!

***

அலறிக்கொண்டிருந்த அவனின் சீனா கைப்பேசி,
சிரித்தபடி பேச்சை துண்டித்தபின்
பாடத்தொடங்கியது!

***

பற்களை கடித்தபடி,
கண்களால் செய்கை செய்கிறாள் அவள்,
மேலெ வருகிறான் அவன்,

"ம்ம், அப்பிடி! சொன்னா கேட்டுக்கணும்
உன் நல்லதுக்குதாம்ப்பா சொல்றேன்"
நடத்துனர் சொல்கையில் 
தலைகுனிந்து கள்ளமாய் சிரிக்கிறாள்!
***

எல்லா பேருந்திலும் காணமுடியும்,
ஒரு குழந்தை ,
அவன்(ள்) சிரிப்பு,
தன்னையும் குழந்தையாய் பாவிக்கும்
ஒரு முதியவர்!

***

அடிபட்டு ,
கைமுறிந்து,
கால் திருகி,
தலை பிளந்து,
என் மடிகிடந்து துடித்த ராதண்ணன்
"ஏதோ"சொல்ல வாய் திறந்து,
ஊற்றிய ஒரு கவளம் நீரில்
அடங்கிப்போனார்!

***

"எல்லோரும் பயணிக்கிறோம்,

எல்லோருமே வீடு சேர்வதில்லை"

இருக்கும் ,
எல்லோருக்கும் ஒரு பயணம்,
ஒரு 48b
பயணத்தில் பல கதை!


ஆசை அறுபது நாள்
மோகம் முப்பது நாள்,
அன்பிருக்கும்தான்
ஆயுள்வரை,
கைய்யில் அகப்படுவதில்லை,
கடவுள்.

எட்டாகனி புசித்து
கானல் நீர் பருகி
முள்படுக்கையில் ஓய்வெடுத்து
பயணம் தொடர்வோம் வா 
நம் லட்சியம் ,அருகே தான்!

சினம் கொண்ட சிட்டுகுருவி!

"ஒரு மனுசன் இங்க காட்டு கத்தா , கத்திட்டிருக்கேன்,
அங்க என்ன பன்றே???"

தடதடவென்று முன்னால் வந்து,
முகத்தோடு முகம் பார்த்து
"டீவி பாத்துட்டிருக்கேன் " என்று,
சொல்வாளானால்,
"பாரு,பாரு" என்று
நழுவிவிடுவது உத்தமம்!


"டீ" என்கையில்
"ம்" என்றால் ,
"நான் சோகமாக இருக்கிறேன்,
முத்தமிட்டு ஆறுதல் படுத்து"
என்று பொருள்!

"தங்கம்" என்கையிலும்
அமைதியென்றால்,
"கோவமாருக்கேன்"
"என்ட்ட பேசாதே"
"என்னமோ பண்ணித்தொல"
"என் புத்திய செருப்பால அடிக்கணும்"
"……………"
"…………………"
"………………............"
அவளின்னும்
உறங்கவில்லையென்று அர்த்தம்!

இரவு விளக்கு

கோபப்பட்டு திட்டும் நாளெல்லாம்
நான் ,உறங்கும் வரை
பாத்திரம் கழுவும் வேலை,அவளுக்கு !
அருகே வந்து படுத்ததும்
தாகத்தில் உறக்கம் தெளியும் எனக்கு!
அவள் கண்ணீரும்
என் நியாயங்களும்
இடைவெளி நிரப்பும் ;
இரவு விளக்கின் வெளிச்சம் போல!

வெற்றிபெரும்
எல்லா ஆண்களின் பின்னும்
ஒரு பெண் இருக்கிறாள்!
அந்த பெண்ணாய் இருக்க ஆசைப்படுபவள்,
வெற்றிகளின் பின்னால் ஓடுபவனை
நேசித்து தொலையட்டும், 

அவளுடுத்திய
புதிய புடவை பற்றி

அவனுக்கென்ன???

ரசனை உணர்ச்சியின்றி
வார்த்தை கோர்ப்புகள்
கவிதையாகின்றன!
வாழ்வது வேறு
உயிரோடிருப்பது வேறு
தெரியும்தான், 
இப்போதைய என் தேவை,
உயிரோடிருப்பது!

இந்த கொடூரமான இரவு
எரிந்தடங்கிய சாம்பலாய்
சில கவிதைகள்!

வார்த்தைகளின் காதல் புணர்ச்சி
கவிதை
வசைசொல் கற்ப்பழிப்பு

Saturday 23 March 2013

குடும்பத்தை பிரிந்த
குழந்தையாய்,
திரும்ப கொடுக்காத
நூலகப்புத்தகம்!

சாகவிடுங்கள்,நல்லது!
வாழ்வெனும் வாக்குறுதி கொடுத்து
ஏமாற்ற வேண்டாம்.

பருவ மாற்றங்களால் ஏற்ப்படுகின்றன,

புயல்!

வார்த்தைகளின் காதல் புணர்ச்சி
கவிதை
வசைசொல் கற்ப்பழிப்பு

குடும்பத்தை பிரிந்த
குழந்தையாய்,
திரும்ப கொடுக்காத
நூலகப்புத்தகம்!

Thursday 14 March 2013

ஆலமர திண்டிலமர்ந்து
"உனக்கு ஞாபகமிருக்கா?"
"உனக்கு ஞாபகமிருக்கா?" என்றபடி
பழங்கதை அசைப்போட்டு சிரிக்கும்
இரண்டு தாத்தாக்களின் மனமும்
நடுங்கியிருக்கலாம்
காற்றிலாடும்
பழுத்த ஆலிலை போல,
பின்  பெருமூச்சு, 
மறுபடி அமைதி
ஆலமரமும் பெருமூச்சு விட்டு அமைதியானது போல!

பகலென்பது உயிர் கிழிக்கும் மிருகம்,

இரவென்பது அரவை இயந்திரம்!

*இரட்டை உலகம்*




நீ ,மதுவை மறைத்து
சுருட்டிக்கொண்டுவந்த காகிதத்தில்,
மார்க்ஸின் படம் இருந்தது.
என் நொறுக்குத்தீனி பொட்டண காகிததில்
இந்தபக்கம் ஒரு வளிப்பான நடிகையும் ஒரு கிசுகிசு வும் ,
அந்த பக்கம் குழந்தையை பற்றின கவிதையும் இருந்தது!
ஒன்றாக  குடித்தோம்
விவாதித்தோம் 
எப்போதோ உறங்கினோம்!
விடிந்த பின்  ,
நம்மோடு
கொஞ்சம்  புரட்சியும்,
கொஞ்சம் கவிதையும்
அறை நிறைத்திருந்தது.
நண்பா வா 
சுத்தம் செய்யலாம்
வாந்தியை!
வேலைக்கு நேரமாச்சு!


ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்த படி,
தலையை ஆட்டிக்கொண்டே
மகிழ்ச்சியாக கடக்கும்
அந்த சிறுமியின் புன்னகை
ஒரு இளைப்பாருதலோ,
ஒரு சாப விமோசனமோ வழங்கக்கூடும் ,
என்னைப்போன்ற இன்னும் சிலர்க்கு!


மலர்தல்  அழகானது,
மலர்தல் மகிழ்ச்சியானது,
ஒரு காட்டுபூவாய் மலர்கிறேன்
நானும்!

நீ சொன்னாலென்ன,
நான் சொன்னாலென்ன,
" எக்கேடோ கெட்டுப்போ வென்பது,
பொதுவான பிரயோகம்!

வானம்

மீன் வளர்க்க ஆசைப்படுகிறாள்
ஆனந்த வர்ஷினி!
ஒரு பெரிய தண்ணீர் தொட்டியும்,
ஒரு குட்டி நிலாவும் வேண்டும்!

*ஆற்றங்கரை வீட்டுக்கூடம்*

வடகிழக்கு மூலையில் அமர்ந்து,
வரவு செலவு கணக்கு பார்க்கிரார்
கிருஷ்ணன் குட்டி தாத்தா, 

தன் இரண்டு வயது மகனை
ஆங்கில பள்ளியில் சேர்ப்பது பற்றி,
அப்பாவோடு விவாதித்து கொண்டிருக்கிரார்
சுதாகரண்ணா.

"அறிவுள்ள புள்ளை எங்க படிச்சாலும் ,
படிக்கலேன்னாலும் ,
முன்னேறிக்கும் சுதாகரா,
கவனம் வேணும் கவனம்!
கடகெட்ட நாயி,
இவனெயெல்லாம் வளத்தி,ஆளாக்கி……………
எப்போதும் போலவே கடைசியில்
என் மீதுதான் வந்து விழும்
அப்பாவின் கோபம் !

"ட்டொக்கு,ட்டொக்கு வென்று
வெற்றிலை இடித்துக்கொண்டே,
"இந்த காலத்து புள்ளைகளுக்கு எங்க
இடுப்பு வளையுது???
சுச்சு போட்டா
தேங்கா அரைக்குது,
கொளம்பு வைக்குது,
அத்தன குப்ப கெடக்கு  ,அடிச்சு விடறாளா பாரு"
பழமுத்தி என்று செல்லமாய் அழைக்கப்படும்
குறும்பை பாட்டியிடம் ,
குறைகள் அடுக்குவாள்
வேலம்மை பாட்டி, 

ஏதேனும் ,பெண்கள் கதை பேசிக்கொண்டிருக்கலாம்
கதிர்வேலும் , டெய்லர் மணியும் ! 

தென்மேற்க்கில் ,
லாலிபப் சப்பிக்கொண்டே
குட்டி சைக்கிளில் வட்டமடிக்கிறாளொ, அம்மாவை நினைத்து அழுகிறாளோ,
தவிட்டு தாளிக்குள்
தவறி விழுந்து இறந்து போன
ரேவதிக்குட்டி.


Wednesday 13 March 2013

எல்லா கேள்விகளுக்கும்
வாழ்க்கையிடம் இருக்கும் ஒரே பதில் ,
"அது அப்படித்தான்"!

உயிர்
மனிதன்
இனம் 
தேசம்
மதம்
ஜாதி
ஊர்
வீடு

எல்லோருமே ,
அவரவர் வீட்டில் சாகிறார்கள்
அவரவர் பக்கத்து வீட்டை
திட்டியபடி!

ஒரு உயிரை ,
கோடி முறை
கொல்ல  முடியும்!

என்  பக்கங்களில்,
எல்லாமே கிறுக்கல்கள்தான்,
பின் தாளில் அச்சு பதிய ,
உன் பெயரை எழுதி, அழித்த
தடம் மட்டும் ,
வடு!


மேடு , பள்ளங்கள் தாண்டிவந்து,
வாசல்படி தடுக்கியதில் உடையும்
சில குடங்கள்!


காதலியை ,
நிலவோடு ஒப்பிடும் பூனைக்கு,
நிலா; பால்கிண்ணம்!

*எச் எம் டீ கோஹினூர்*

அப்பா பெரும் கோபக்காரர்,
"எப்பிடீம்மா,
இந்த மீசக்காரர
கெட்டிக்கிட்டு வாழ்ந்தே?" 

"இல்லேனா, உன்னமாரி,
ஒரு புள்ளைய  பெத்து,
வளத்தீருக்க முடியுமா ராசா"

சிரித்த படியே ,
அப்பாவின் கதை சொல்ல தொடங்குவாள் ,அம்மா!
அவர் சினிமா கூட்டிப்போன கதை,
பழனியில் எனக்கு மொட்டைப்போட்டவனிடம்
சண்டையிட்ட கதை,
தன் அக்கா , தங்கையின் கல்யாணம் செய்துவைக்க
வெளியூர் வேலைக்கு சென்ற கதை,
ஓரிரு நாள் சாராயம் காய்ச்சிய கதை,
ஒழுகும்  குடிசை மாற்றி
ஓட்டு வீடு கட்டிய கதை,
இன்னும் இன்னும் எத்தைனையோ கதைகள்,
கதைகளின் முடிவில் ,
கன்னம் கிள்ளி
முத்தம் தருகிறாள் எனக்கு!

திருமண புகைபடத்தில்,
பம்மி நிற்க்கும் அம்மாவின் அருகே,
கம்பீரமாய் என்னை பார்த்து சிரிக்கிறார்
மீசைக்காரர்.

மீசையை  முறுக்கி விட்டு,
செல்லமாய் ,என் பின்னாந்தலை தட்டுவது போல,
லேசாய் ஒரு தட்டு கொடுக்க,
ஒடத்தொடங்குகிறது
அப்பாவின் எச் எம் டி வாட்ச்,
வீடு நிறைகிறது அவர் சிரிப்பு சப்தம்!

கணேஷ்மூர்த்தி சிவராமன்

*பிள்ளையார் கோவில் யானை*



திரும்பி பார்க்கும் குழந்தைக்கு,
கடவுளாகிறது யானை,
சில சமயங்களில் ,
திரும்பி பார்க்கும் குழந்தைக்காக
யானையாகிறார்
கடவுள்!

சில்லறைகாரர்களிடம்
நோட்டு சிக்குவதேயில்லை.
நோட்டை வைத்துக்கொண்டு
திரிபவர்களுக்கோ,
சில்லறை தட்டுபாடு!

சில நேரங்களில்
மூச்சுக்காற்றில் அணைந்துவிடும்
ஏற்றிய தீபம்!

அந்த பெண்ணை,
துகிலுரித்து பார்க்கும் ஆசையின்
முதல் முயற்சியாய்,
ஒரு friend request கொடுக்கிறாய் !

உருவாக்குவதும் ,உடைப்பதும்
அவரவர் விருப்பம்
பிம்பங்கள் உண்மையாகாது

அமிலம் விழுந்த முகத்தின்
அழகை ரசிக்கிறேன்,
இன்னும் கொஞ்சம் மீதமிருக்குமா ,தோழி?
இதயம் துடிக்கிது பார்!

உயிர் வாழ்தலே
மிகப்பெரும் தண்டனை
பல உயிர்க்கு!

நீயொன்றும் புதியவளில்லை!

*ம்மே*


கொக்கியில் தொங்கிக்கொண்டிருக்கும்
ஆட்டு தலையின் நிலைக்குத்திய பார்வை
என்னை வெறிக்கிறது, 
கறிவெட்டும் சப்தம் , கடந்த பின்னும்
காதில் ஒலிக்கிறது!
பச்சிறைச்சின் நெடியை கடக்கும்
ஒவ்வொரு முறையும் 
கசாப்புக்கடை மரத்துண்டாய்
வெட்டுப்படுகிறது மனம்,
எனக்காகவும் சேர்த்தே
தன் பெருங்குரலெடுத்து அலறுகிறது
ஏதோ ஒரு ஆடு!


பாம்பிருக்குது,
பேயிருக்குதுவென்று சொல்லி,
அம்மா பயமுறுத்தி வைத்திருந்த இடங்களிலெல்லாம்,
காலி மது புட்டிகளும்,
பிளாஸ்டிக் டம்ளர்களும்,
சிகரட் துண்டுகளும் சிதறிக்கிடக்கிறது
இப்போது!

தீண்டதகாதவனென்று
உன்னை சொல்லியதாரடா?
நான் சொல்கிறேன்;
நீ தான் ,என்னை
தீண்ட தகுதியானவன்!


அம்மாவோடு சண்டையிடும்
அப்பாவை பிடிக்கவில்லை,
அக்காவை திட்டும் மாமாவை,
அண்ணியை அழவைக்கும் அண்ணனையும்,
உன்னை மட்டும் ஏன்
இப்படி பிடித்து தொலைக்கிறதோ,
பாழாய்போன மனசுக்கு!

போடா நாயே,
நீ, திருந்தவே மாட்டே!
:'-(

நீ,
"கருவண்டு" என்றழைக்கும்போது தான்,
நான் ,உலக அழகி ஆகிறேன்!

பூஜ்யம் வாங்கிய
திருடன் ஜெயிக்ககூடும்,
விளையாட்டின் பெயர்
காதலென்று வை!


ஊடல் கழிந்த இரவுகளில்
எனக்கான முத்தங்களையெல்லாம்
மூட்டை கட்டி வைத்திருக்கிறாள், 
நானொன்று கொடுக்கையிலோ
முரண்டு பிடிக்கிறாள்,
ஒன்று இரண்டு  என, மூண்றோடு
திரும்பி படுத்த ஐந்து நிமிடங்களில் ,
அவிழ்ந்து விடுகிறது அவளது மூட்டை,
உடைந்து விடுகிறது எனது அணை,
கடலில் சேர்கிறது நதி!



மிக்ஸியும் , டீவியும் சோர்ந்து கிடக்க !
அப்பாகாலத்து மின் இஸ்திரி பெட்டி ,
தன் ,அகலவாயை திறந்து
மின்சாரம் தின்கிறது,

பெண்ணே , வேறு எவளுக்கும் கொடுக்க ,
கைவசம் இப்போது கவிதைகளில்லை!

தான் அடைகாத்த முட்டையாயினும்
குயில் குஞ்சை தள்ளிவிடும்
தாய் காக்கை!

அபஸ்வரத்தில் காக்கையின் பாடல், 

இனிமையான வரிகள் கொண்டிருக்கலாம்!

தேடாதே,
கவிதையில் அகப்படுவதல்ல

கவிஞனின் முகம்!

வழிபோக்கனின் வாழ்க்கையில்
நீருக்கும் நிழலுக்கும் பஞ்சமில்லை,
மயங்கி சரிந்து இறப்பேனாகில் ,
அதுவும் பூரண சம்மதமே!

*சித்தார்த்தன் கதை*

யசோதரையின்
கண்ணீரில் வளர்ந்த
முட்செடிகளினூடே ,
கெளதம சித்தார்தன் பயணம் தொடர்ந்தான்,
பல யுகப்பயணம்,
ஆடை கிழிந்து
கால்கள் இடறி,
ஊணின்றி ,
உறக்கமின்றி
பலயுகம் !
அழுது களைத்த யசோதர
அழுகை துறக்க,
களைப்படைந்த சித்தார்த்தன்
பயணம் துறந்தான்,
மர நிழலில் ஓய்வெடுத்த
கெளதமன் தலையில்
உச்சிகிளை குருவியொன்று
எச்சமிட்டது!

வசந்தகாலத்தில்
பூக்களின் பாதையில்
திரும்பி வந்தான் புத்தன்!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

*நாய் வாழ்க்கை*

கொழு கொழுவென்றிருக்கும் ,
பணக்கார நாய் !
ஜாக்கியென்றோ,டோமியென்றோ பெயரும்,
அதற்கான உணவும்,
அதனை அழைக்கும், கொஞ்சும் 
மொழிபோலவே,
"புஜ்ஜூ"
"கோ அவேய்"
  "கம் ஹியர்"!
அதற்கென்று ஒரு வீடு…………,
ஒரு மருத்துவர்…………,
நடை பயிற்ச்சியின் போது
ஒரு காவலாளி,……………
பரிபூரண சுக செளக்கிய வாழ்வு!
இதையெல்லாம் விட பெரிய விஷயம்;
மணி என்றோ,
குட்டி என்றோ,
நாம் பன்னை பிய்த்து வீசுகையில்
வாலாட்டி ஓடி வரும்
எலும்பின்மேல் தோல் போர்த்திய
ஏழை நாய் போல
அவை, சாலையில் அடிபட்டு
அனாதயாய் செத்து கிடப்பதில்லை!


இன்னும் உச்சத்தில் போகட்டும்
நாதம் .
உச்சஸ்தயியில் அறுந்துபோகும்
தந்தி கம்பிகளில்
"சட்"டென வெளிப்படும்
பேரமைதி!

"காதலே.காதலே உன் மாரோடு சேர்ந்திருக்க என்ன வழி?"

"காறி உமிழ்ந்ததெல்லாம் கணக்கில் வைக்காதே!"

அமைதி என்பது,
அடுத்த போருக்கான
ஆயத்தம்!

உடைந்த கண்ணாடியில் ,
பல முகம்
யாரேனும் ,பொறுக்கி சேர்த்து
ஒட்டிக்கொடுங்களேன்,

வசந்தம் கழிந்த நாட்களில்
முட்கள்
கண்ணில் குத்தும்!

"நால்லாருக்கியா?"
"ம்,நல்லாருக்கேன்!"
கேள்வியும் பதிலும்
வாடிக்கையாகி விட்டது,
கடந்து சென்றபின்
மறுமுறை ,திரும்பி பார்ப்பதும்!

பூமியின் ஒரு பாகம் இருள,
மறுபாகம் விடியும்.
மழையும் அப்படியே!
ஏதேனும் இரு இதயங்களில்
மாறி மாறி பெய்யும்!

சுதந்திரமென்பது
"கொஞ்சம்"
நீளமான கயிறு!

*ஒரு பத்திரிக்கை செய்தி*

"அவர் சம்மதித்தால் தொடர்ந்து நடிப்பேன்" 
திருமணத்திற்க்கு பின் ,
நடிகை உமாதேவி பேட்டி!
.
.
.
.
.
.
.
.
இவர் இயக்கி நடித்த
" பெண்சக்தி "என்ற திரைபடத்துக்கு
இரண்டு தேசிய விருது பெற்றவர் என்பது
குறிப்பிடத்தக்கது!

பூக்கள் கோர்த்து,
மாலையாக்கி
வார்த்தைகள் கோர்த்து ,
கதைகளாக்கி,
அக்கவிடம் பேசிக்கொண்டே
பூ கட்டுகிறாள் அம்மா.

*பிரபஞ்சம்* 


சோறு சாப்பிடும்
குழந்தையை சுற்றி,
சிதறிகிடக்கிறது
நட்சத்திர பருக்கைகள்.

*மயானம்*

சத்தியவான் ஹரிச்சந்திரன்
பொய்களை எரித்துக்கொண்டிருந்தான்.
அவனை, யார் எரித்தாரோ!

*வசந்தகாலம்*

நீ நட்டு வளர்த்த செடியில் ,
உனக்கான பூ பூக்கும்.
தேவைப்படுவது;
கொஞ்சம் காத்திருத்தல் !